பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளது
வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தியாளர்கள் வெற்றிடத்திற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் 34வது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண விவசாய அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்குமான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்திற்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே அதிகளவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக 361 நியமனத்தில் 332 நியமனங்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக நாம் தேர்தல் ஆணையாளருக்கு விடயத்தை தெரியப்படுத்தி, அப்போது தேர்தல் காலம் என்பதால் தடை செய்திருந்தோம்.
அதற்குப் பின்னர் கடந்த மாதம் 19ம் திகதி 192 பேருக்கு மீண்டும் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாம் இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஊடாக ஜனாதிபதிக்கும், அவைத் தலைவர் ஊடாக ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தோம். இதன் பலனாக குறித்த நியமனங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில், எந்தவொரு பெரும்பான்மையினத்தினை சேர்ந்த ஊழியர்களும் இல்லாத நிலையில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 9 ஊழியர்கள் உள்ளனர்.
அவர்களும் அந்தப் பகுதியில் உள்ள மக்களை மையப்படுத்தியே உள்ளதுடன், தமிழர் பகுதியில் உள்ளவர்கள் இடமாற்றம் பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே உள்ளனர். இது எமது விவசாயிகளுக்கும், எமக்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும் என தெரிவித்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்