மு.கா தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவலம்
அமைச்சின் ஊடகப் பிரிவு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய அவல நிலைக்கு காரணம் என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் அப்துல் ரஸாக் மற்றும் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,
“இன்று முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு பொய் பிரச்சாரங்கள் மூலம் இந்த அரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர்.
தற்போது நடைபெறுகின்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் கிழக்கில் அரசாங்கத்தினை கடுமையாக விமர்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வட மத்திய மாகாணத்தில் அரசாங்கத்தினை ஆதரித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நிற்கின்றது.
இன்று பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றது என பிரச்சாரம் செய்து சகல இனங்களோடும் ஐக்கியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்களை திசை திருப்பி இனவாதத்தை பேசி பேரினவாத சக்திகளோடு முஸ்லிம்களை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றார்கள்.
வடக்கிலே புலி பயங்கரவாதிகளால் 79 முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டு ஆயுதங்கிடங்குகளாக பாவிக்கப்பட்ட போது என்னவென்றும் பார்க்காத முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் பள்ளிவாசல்கள் மீது அக்கறை ஏற்படுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு சமூகத்தை விற்று அரசியல் செய்கின்ற நிலைக்கு இன்று முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த விசமப்பிரச்சாரங்களுக்கு மக்கள் ஒரு போதும் செவிசாய்க்க கூடாது.
30 வருட காலமாக நாங்கள் அனுபவித்து வந்த துன்பங்களிலிருந்து இன்று எங்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. அபிவிருத்தி காணாதிருந்த எமது பிரதேசங்களில் இன்று அபிவித்தி மழை பொழிந்துக்கொண்டிருக்கிறது.
மக்கள் நிம்மதியாக நாடெங்கிலும் அச்சமின்றி பயணம் செய்கின்றனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் இந்த பொய் பிரச்சாரங்களால். பெரும்பான்மை சமூகங்கள் எமது முஸ்லிம் சமூகத்தினை இனவாதிகளாக பார்க்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
மூவின மக்களும் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற பிரதேசங்களில் இன்று ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்ற அளவிற்கு முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட்டு இவ்வாறான பொய் பிரச்சாரங்களுக்கு செவிசாய்க்காமல் நாட்டில் மலந்துள்ள சமாதானத்தையும் எமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற நிலையான அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும்” என கூறியதாக அமைச்சரின் ஊடக பிரிவு தெரிவித்தது.
இந்த கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறூக் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.








அமைச்சர் ரிஷாத் அவர்களே ! நீங்கள் நிறைய நலவு செய்கிறீர்கள் . தற்போது உங்களையும் ஏற்றுக்கொள்ளும் மநப்போக்கு எமது சமூக மட்டத்தில் ஏற்ப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் அவர் அப்படி செய்தார் , இவர் இப்படி செய்தார் என்று குப்பைஎல்லாம் கிண்டாமல் (இதெல்லாம் கேட்டு கேட்டு அலுத்துப் போச்சு,இப்ப யாராவது இப்படி பேசினால் அவர் மீது வெறுப்பும் கோபமும்தான் வருகிறது.) எம் மக்களுக்கு ஏதாவது உருப்படியான வாக்குறுதிகளைக் கொடுத்து அதனை செய்து காட்டுங்கள். உங்கள் மீது இன்னும் எமது ஆதரவும் அன்பும் அதிகமாகும்.
அபூ அம்மார்
August 31, 2012 at 2:23 am