முஸ்லிம்களின் விமோசனத்திற்கும் இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் பிரார்த்திப்போமாக!
அப்துல் ஹபீஸ்:அல் குர்ஆனும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்தும் சமத்துவம், சமாதான, சகவாழ்வு, சகிப்புத்தன்மை ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு ‘ஈதுல் பித்ர்’ ஈகைத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக.
இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ‘ஈதுல் பித்ர்’ பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
உள்நாட்டிலும், உலகளாவிய பல நாடுகளிலும் முஸ்லிம் உம்மத் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மீண்டும் ஒரு பெருநாளைச் சந்திக்கின்றோம்.
இலங்கையைப் பொறுத்தவரையிலும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, சமய வழிபாட்டுச் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகியுள்ள நிலையில் உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் மிகவும் நிதானமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
நமது நாட்டிற்கு எதிரான ஜெனீவாப் பிரேரணை விடயத்தில் அரபு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இந் நாட்டிற்கு ஆதரவாகக் திரட்டிக் கொடுத்ததன் ஊடாக முஸ்லிம்களின் தாய்நாட்டுப்பற்றை சிறப்பாக வெளிப்படுத்தி உலகறியச் செய்திருந்தோம்.
இந் நாட்டு முஸ்லிம் சமூகம் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட தேசிய இனம் என்ற காரணத்தினால், நமது வாக்குப் பலத்தின் வலிமையினால் அதனை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமையாத தேவை முன்னரை விட அதிகமாக இப்பொழுது உணரப்பட்டுள்ளது.
அற்ப அரசியல் இலாபங்களை அடையும் குறுகிய நோக்கோடு சமூகத்தை அடகு வைத்து அல்லது காட்டிக்கொடுத்து அருளாளன் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சோதனைக்கும், தண்டனைக்கும் யாரும் ஆளாகிவிடக் கூடாது.
முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும், இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் இந் நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக!
‘ஈத் முபாரக்’
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







