பௌத்தர்கள் மற்றவர்களது உடமைகளைப் பறிப்பவர்கள் அல்லர்: ஜனாதிபதி
அம்ஹர்: கண்டி, அஸ்கிரிய மஹா விஹாரையின் 700 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு சுமார் 10 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைத்துள்ளார். கண்டி அஸ்கிரிய பீடம் ஆரம்பித்து 700 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் அஸ்கிரிய விகாரைப் பகுதி அஸ்கிரிய விகாரைப் பிரதேசம் என பெயர் சூட்டப்பட்டது. அஸ்கிரிய பீடம் ஆரம்பித்து 700 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் நேற்று (12.6.2012) செவ்வாய்கிழமை நடந்த தேசிய விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாவது
பௌத்தர்கள் மற்றவர்களது உடமைகளைப் பறிப்பவர்கள் அல்லர். மாறாகத் தங்களது உடமைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொள்ளும் கொள்கை கொண்டவர்களாகும். பௌத்த மக்களது இரண்டு கண்கள் போல் அஸ்கிரிய பீடமும் மல்வத்தை பீடமும் அமைந்துள்ளன. இவை இரண்டும் முழு பௌத்த உலகுக்கு மட்டுமல்லாமல் ஏனைய சமுதாயங்களுக்கும் ஒற்றுமையின் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
அஸக்கிரிய பீடமும் பௌத்த சமயமும் இலங்கை பௌத்தர்களுக்கு மட்டும் சேவை செய்த ஒரு அமைப்பல்ல. அது இலங்கையிலுள்ள அனைத்து மதங்களையும் கௌரவித்துள்ளது. உதாரணமாக கண்டி மீராமக்காம் தர்ஹா மற்றும் கண்டி மீராமக்காம் பள்ளி ஆகிய வற்றை குறிப்பிடலாம், அது அஸ்கிரிய பீடத்தின் காணியிலேயே அமைந்துள்ளது. என்றும் கண்டி திருத்துவக் கல்லூரிக்குச் சொந்மான சர்வதேச அஸ்கிரிய கிறிகட் மைதானம் அமைந்துள்ள காணி அஸ்கிரி பீடத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியாகும். இப்படிப் பல உதாரணங்களைக் கூறமுடியும். எனவேதான் பௌத்தர்களும் பௌத்தமதமும் மற்றவர்களது உடமைகளை அபகரிக்கும் மதமல்ல. மற்றவர்களுடன் தமது உடமைகளைப் பங்கிட்டுக் கொள்ளும் மதம் எனலாம்.
1818 ஆண்டு ஏகாதிபத்தியவாதிகளுக்கும் கண்டிய பரபுத்துவ பிரதானிகளுக்கு மிடையே கண்டி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது பௌத்தமதம் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரு பிரிவு உற்படுத்தப்பட்டது. அன்று அஸ்கிரிய பீடத்தின் தேரரான வாரியப் பொல ஸ்ரீ சுமங்களத் தேரர் இதற்காகப் பாடுபட்டார். மாத்தளை கலவரத்தின் போது அஸ்கிரி மகாநாயகத் தேரர் தனது உயிரைத் தியாகம் செய்தார். இலங்கையின் மன்னராட்சி நிலைத்திருக்கவும் அதன் பின் எமது சுயாட்சி நிலைத்திருக்கவும் கௌதம புத்தரின் புனித தாது பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயக் கடமை இருந்தது. இதை அஸ்கிரிய பீடம் பாதுகாத்து வந்தது.
அது மட்டுமல்ல இன்று கூட புனித தந்தத்தை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கப் பேழையின் திறவுகோள் அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வசமே உள்ளது. இவ்வாறு பல வகையிலும் பௌத்தத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் முகமாக அஸ்கிரிய பீடம் மறக்க முடியாத சேவைகள் பலவற்றசை செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .
1312ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள அஸ்கிரிய மஹா விஹாரை 2012ஆம் ஆண்டு 700 வருடங்களை பூர்த்தி செய்துள்ளமையை முன்னிட்டு புதிய முத்திரை, இலட்சிணை, கொடி, கீதம் என்பன வெளியிடப்பட்டதுடன் இவ்வைபவத்தின் போது சுமார் 6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஹாரைக்கான கட்டிடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது .
நிகழ்வுகளில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மகிந்தானந்த அலுத்கமகே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் கருஜயசூரிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா உற்படப் பலர் கலந்து கொண்டனர்.
அதேவேளை கண்டி மீரா மக்காம் பள்ளி முன் சுவர் முதல் ஏனைய அனைத்துப் பிரதேசங்களும் அஸ்கிரிய விகாரைப் பிரதேசம் எனப் பெயர் சூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.
படங்கள்மொஹொமட் ஆஸிக்












அடுத்த இலக்கு கண்டி மீராமக்காம் பள்ளியாக இருக்குமோ??? இந்த பள்ளியும் சியாரமும் உடைக்கபட்டால் முஸ்லிம் சமூகத்தில் உள்ள தௌஹிதீன்களின் நிலைபாடு என்னவாக இருக்கும்??? வரவேட்பா? கண்டனமா???
Mohammed Hiraz
June 13, 2012 at 2:37 pm