சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் நோக்கி இந்திய தொழில் அதிபர்களுக்கு அழைப்பு
பர்ஹான், அஸ்லம் அலி: இலங்கையில் நிறுவப்படும் சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தினூடாக வர்த்தக, கைத்தொழில் பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏனைய பல நாடுகளைப் போன்றே இந்திய தொழில் அதிபர்களும் முன்வர முடியுமென நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த வாரம் இந்திய கைத்தொழில் ஒன்றியத்தின் பிரதிநிதிகள்
(Confederation of Indian Industry) இலங்கை நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புது டில்லியில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறினார்.
ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் தற்போதையத் தலைவரான நீதியமைச்சர் ஹக்கீம் அதன் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புது டில்லி சென்றிருந்த போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அவ்வமைப்பின் தலைமையகம் புது டில்லியில் அமைந்திருக்கின்றது.
இந்திய கைத்தொழில் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் அந்நாட்டின் உயர் நீதிமன்ற சிரேஷ்ட வழக்கறிஞர் லலித் பாஷின் தலைமையில் அமைச்சர் ஹக்கீமை சந்தித்து உரையாடினர்.
இலங்கையில் நிறுவப்படும் வர்த்தக தொழில், பிணக்குகளை சுமூகமாக தீர்த்து வைப்பதற்கான நடுத்தீர்ப்பு மையத்தின் (International Arbitration Center) பயன்பாடு பற்றி ஆரம்பத்தில் அமைச்சர் விளக்கமளித்தார். பிரஸ்தாப நடுத்தீர்ப்பு மையத்தினூடாக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வைக் காண்பதில் ஏற்கனவே பல நாடுகள் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறிய அமைச்சர் ஹக்கீம், இந்தியாவில் துரிதமாக முன்னேற்றம் கண்டு வரும் கைத்தொழில் வர்த்தக துறை இந்த சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தினூடாக அதிக நன்மைகளை அடைய முடியுமெனவும் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த சிரேஷ்ட வழக்கறிஞர் லலித் பாஷின் இலங்கை, இந்தியாவுக்கு மிக அண்மையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பது நடுத்தீர்ப்பு மையத்திற்கு பிணக்குகளை முன்வைப்பதற்கு பெரிதும் உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தின் செயல்பாடுகளை வடிவமைப்பதற்காக ஒரு விசேட குழு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார். அத்துடன், நீதியமைச்சர் ஹக்கீம் இந்தியாவின் சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கும் பொதுவான சட்ட விவகாரங்கள், வழக்குத் தாமதங்கள், நீதித்துறையில் பொறுப்புக் கூறும் கடப்பாடு, மாறி வரும் உள்நாட்டு நிலைவரங்கள் மற்றும் உச்சக்கட்ட திட்டமிடல் செயல்பாடுகள் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நீதித்துறை ஒத்துழைப்பு தொடர்பாக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை செய்து கொள்வது தொடர்பிலும், சாக் நாடுகளின் மாநாட்டுக்கு சமாந்தரமாக சார்க் பிரதம நீதியரசர்களின் ஒன்று கூடலொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.








