போலியாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்தவர்களுக்கு நஷ்ட ஈடு !!
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மீதான குண்டு தாக்குதல் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது அந்த வழக்கில் இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று ஆண்டுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. முதன் முறையாக ஆந்திர அரசாங்கம் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முன் வந்துள்ளது. இது இந்திய குற்றவியல் வரலாற்றில் ஒரு புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று இந்தியவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தேசிய சிறுபான்மையினர் குழுவின் பரிந்துரைக்கு இணங்க தவறாக சிறையில் அடைக்கப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்களில் 20 நபர்களூக்கு 3 இலட்சமும் ஏனைய 50 நபர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படுவதாக மாநில அரசின் சிறுபான்மை நல குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
மே 18, 2007 அன்று நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 முஸ்லிம் நபர்கள் கொல்லப்பட்டனர், போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் 5 முஸ்லிம் நபர்கள் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்புக்கு காரணமாக பல முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் கொடுமைப்படுத்தப்படுவதாக தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம் சாட்டியது. பின்பு அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர்.
இதன் பின்னர் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக வலது சாரி ஹிந்துத்வா பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் நஷ்ட ஈடு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர முதல்வர் கிரண் ரெட்டி தவறுதலாக சிறையில் தங்கள் வாழ்வை கழித்த அத்துணை முஸ்லீம் இளைஞர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறினார். நஷ்ட ஈடு வழங்குவதோடு அப்பணத்தை தவறு செய்த காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய சிறுபான்மை கமிஷன் கோரியிருந்தது.
சிறையில் தங்கள் வாழ்வை கழித்த அப்பாவிகளுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசாங்க வேலை தரவேண்டும் என்றும் தேசிய சிறுபான்மை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் உள்ள மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லீமின் உள்ளிட்ட முஸ்லீம் குழுக்கள் நஷ்ட ஈடு தருமாறு சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.







