அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது
உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 12 சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவம் திருகோணமலையில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் இதன்போது அவர் ஆற்றிய உரை தமிழ் மொழி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன அவற்றை இங்கு தருகின்றோம்.
அற்ப சொற்ப சலுகைகளுக்காகத் தமிழ் மக்கள் தமது தன்மானத்தை அடகு வைக்க முடியாது.சாத்வீக வழியிலான எமது முயற்சிகள் தோல்வியடையுமானால், நாமும் மாற்று வழியைத்தான் கடைப்பிடிக்க நேரிடும். இதனை எவராலும் தடுக்கமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளார் விரிவாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு கிழக்கின் உள்ளூராட்சிச் சபைகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்றுக்காலை திருகோணமலை நகராட்சி மன்றத்தின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்வில் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எம்மக்கள் அளித்துள்ள ஆணைக்கு மதிப்பளித்துத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கு உறுதியான தீர்வு ஒன்றைக் காண அரசு முன்வர வேண்டும். அண்டை நாடுகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது, சர்வாதிகாரம் புரிந்த தலைவர்களின் நிலைமை என்ன ஆனது என்பதையும் அரசு உணர வேண்டும். தென்பகுதி மக்கள் எப்படி ஆளும்கட்சிக்கு ஆணைவழங்க உள்ளனரோ, அதேபோலதான் வடக்கு, கிழக்கு மக்கள் எமக்கு ஆணை வழங்கி உள்ளனர்.ஜனநாயக முறைப்படி தேர்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், அதே ஜனநாயக முறைப்படி மக்கள் பலத்தைப் பெற்ற ஒரு சமூகத்துக்கு அநீதி இழைக்கக்கூடாது. ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காது சர்வாதிகாரப் போக்கில் நடந்துகொண்ட உலக நாடுகளில் மக்கள் புரட்சி வெற்றியளித்துள்ளது. இதேபோன்று, எமது மக்களின் சுயநிர்ணய உரிமைக ளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அது தான் உண்மையான ஜனநாயகம்.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின், அரசுடன் தொடர்புகொண்டு பேச்சு மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான இணக்கப்பாடு ஒன்றைக் காணத் தயாராக இருகிறோம் என்று அறிவித்தோம். இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. ஆனால், அரசு செவிசாய்க்கவில்லை.பின்னர், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடைபெற்றன. எமது அடிப்படை சுயநிர்ணய உரிமைகள் குறித்து விரிவான கருத்துக்களை நிலைப் பாட்டை மக்கள் முன் வைத்தோம். எமது கொள்கைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு அளித்து எமக்கு ஆணை வழங்கி உள்ளனர்.இதன்படி, அரசுடன் பேசுகின்றோம். தனிநாடோ, தமிழீழமோ நாங்கள் கேட்கவில்லை. சிங்கள, முஸ்லிம் மக்களுடன் குரோதம் பாராட்டவும் இல்லை.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. எம் மக்கள் இன்றும் அகதிகளாகவே வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. எங்களுடைய காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; எமது உடைமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; கல்வி அபிவிருத்தி காண வேண்டும்; கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும்; சுகாதார வசதிகள் பேணப்பட வேண்டும்; விவசாயிகள் தமது காணிகளில் விவசாயம் செய்ய வேண்டும்; கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாகத் தொழிலில் ஈடுபடப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.இவற்றையெல்லாம் நிர்ணயிக்கும் அதிகாரம் வேண்டும். நாம் வன்முறையை எதிர்ப்பவர்கள்; ஜனநாயகத்தை மதிப்பவர்கள். அதேசமயம், அதிகாரத்தில் இருக்கும் சிலர் அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் என்று வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.எமது நோக்கம் ஒன்று தான். மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கவும் நிர்ணயிக்கவும் கூடிய உரிமை வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று அபிவிருத்தி செய்யும் அதிகாரம் வேண்டும்.
இந்த நோக்கங்களுடனேயே நாம் பேச்சில் ஈடுபட் டுள்ளோம். எமது நிலைப்பாட்டைச் சர்வதேச சமூகம் வரவேற் கின்றது.அற்பசொற்ப சலுகைகளுக்காகத் தன்மானத்தை அடைவு வைக்கமுடியாது. சாத்வீக ரீதியிலான எமது முயற்சிகள் தோல்வி அடையுமானால், நாமும் மாற்று வழியைத் தான் கடைப்பிடிக்க வேண்டும். இதனை எவராலும் தடுக்க முடியாது என்றார் சம்பந்தன். இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா, திருகோணமலை அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துரைரட்ணசிங்கம், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்படப் பலரும் உரையாற்றினர்.







