42 குடும்பங்களை மண்முனைப் வடக்கு பிரதேச செயலாளர் வெளியேற்ற அறிவுறுத்தல்
- அபூ றப்தான் -மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராமத்தின் குவைத் சிட்டி வீட்டுத்திட்டத்திலுள்ள 42 வீடுகளில் வசிக்கும் முஸ்லிம்களை அவ்வீடுகள் அமைந்துள்ள காணி அரச காணி என்பதால் அவ்வீடுகளிலிருந்து வெளியேறுமாறு மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கடிதமொன்றின் மூலம் வீட்டுரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
இக்கடிதங்கள் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் சிலரின் வீட்டுக்கதவுகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.இவ்வீட்டுத்திட்டக்காணி அரச காணி என தெரிவித்துள்ள பிரதேச செயலாளர் 1997ம் ஆண்டு 7ம் இலக்க அரச காணிகள் ஆட்சி மீளப்பெறல் சட்ட வெளியேற்றல் அறிவித்தலின் கீழ் இக்கடிதங்கள் இவ்வீட்டின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் விரிவாக பார்க்க
அத்தகைய காணி அரச காணியெனவும் அக்காணியை அனுமதியின்றி ஆட்சி செய்வதாகவும் இதனால் குறித்த வீடுகளில் இருப்போர் வெளியேறிவிடவேண்டுமெனவும் 15.10.2010 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில் பிரதேச செயலாளர் மேலும்; தெரிவித்துள்ளார்.
இத்தகைய காணிகளில் தங்கியிருக்கும் எவராயினும் அக்காணியை காலி செய்யுமாறும் அத்தகைய காணிகள் காலியாக்கப்பட்ட நிலையில் பிரதேச செயலாளரினால் அதிகாரமளிக்கப்பட்ட மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராமத்தின் கிராம உத்தியோகத்தரான எஸ் சிறிதரன் என்பவரிடம் 11.11.2010ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஒப்படைக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி இவ் வீடுகள் குவைத் நாட்டின் உதவியுடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் ஏற்பாட்டில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டப்பட்டு 2007ம் ஆண்டு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குடும்பங்கள் அனைத்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இல்லையாயினும் பெரும்பாலானோர் வறுமையானவர்கள் என்றும், பள்ளிவாயல் படுகொலை உட்பட பல்வேறு வகை வன்செயல்களினால் பாதிப்புற்றவர்கள் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வீடமைப்புத் திட்டம் அமைந்துள்ள பகுதியிலும் அதற்கு அப்பாலும் வசித்த முஸ்லிம் மக்கள் தொண்ணூறுகளில் தமிழ் இயக்கங்களால் திட்டமிட்ட வகையில் விரட்டியடிக்கப்பட்டிருன்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-www. kattankudi.info-







