சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு பெண் குண்டுதாரி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்குத் தமிழ் அரசியல்வாதி ஒருவர் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண் ஒருவரைக் கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார் என்று “லங்கா இரட” பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான அந்த அரசியல்வாதி, “வசந்தி” என்ற தற்கொலைப் பெண் குண்டுதாரியை இப்படுகொலை நடவடிக்கைக்காக ஏற்பாடு செய்துள்ளார் என்ற அப்பத்திரிகை சுட்டிக்காட்டி உள்ளது.
“வசந்தி” என்ப்படும் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிப் பெண், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்திய காலத்தில் கொழும்புக்கு வந்து கிருலப்பனையில் சித்தார்த்த ஒழுங்கையிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தார் என்றும் அந்த வீடு கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்குச் சொந்தமானதென்றும் குறித்த தமிழ் அரசியல்வாதி அந்த தற்கொலைதாரிப் பெண்ணை அந்த வீட்டில் சந்தித்துப் பேசி யிருக்கின்றார் என்றும் புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி “லங்கா இரட” மேலும் தெரிவித்துள்ளது.
ஆனால், புலனாய்வுப் பிரிவினர் உஷார் அடைந்ததை அடுத்து அந்தப் பெண் தம்புள்ள பிரதேசத்துக்குத் தப்பிச் சென்றிருந்தார் என்றும், ஆனால் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவை படுகொலை செய்வதற்காக மேற்படி தமிழ் அரசியல்வாதி அப்பெண்ணை கொழும்புக்கு திரும்ப வரவழைத்துள்ளார் என்றும் “லங்கா இரட” மேலும் குறிப்பிட்டுள்ளது.
உதயன்









