இடம்பெயர்ந்தோர் ஜனவரி மாதத்திற்குள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள்

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இடம்பெயர்ந்தோர் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் 300,000 பேரை எதிர்வரும் நான்கு மாதத்திற்குள் குடியமர்த்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட அரசியல் பிரதிநிதி லியான் பெஸ்கோவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தருவிக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் மூலம் கண்ணி வெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும், இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன் அகதிகள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரையில் மக்களை மீள் குடியேற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடைத்தங்கல் முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருக்கக் கூடும் எனவும், அவர்களை கண்டறியும் வரையில் அவர்களை முழுமையாக விடுவிக்க முடியாது எனவும் அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடைத்தங்கல் முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 20000 இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.







