Archive for September 16th, 2009
அக்கரைப்பற்றில் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு ஆர்பாட்டம்
இணைப்பு -2 |
| அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ.ல.மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்பின் 9ஆவது ஆண்டு கத்தமுல் குர் ஆன் மற்றும் புனித ரமழான் இப்தார் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ரவூப் ஹக்கீம் இன்று மாலை அக்கரைப்பற்று செல்லவிருக்கின்றார்.
இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கரைப்பற்று நகர், தைக்கா நகர், பட்டியடிப்பிட்டி பாலம் ஆகிய இடங்களில் வீதியின் குறுக்கே டயர்கள் போட்டு எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அக்கரைப்பற்றுக்கும் கல்முனைக்குமிடையில் நண்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்த போதிலும் பொலிசாரின் தலையீட்டினால் ஒருசில பஸ்கள் மட்டுமே சேவையில் ஈடுபட்டதைக் காணக் கூடியதாக இருந்தது. அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஏனைய அலுவல்கள் வழமை போல் நடைபெற்றன. ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சில இடங்களில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. எனிலும் தாம் திட்ட மிட்டவாறு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. |
அக்கரைப்பற்றில் ரவூப் ஹக்கீம் எதிர்ப்பு ஆர்பாட்டம்
சற்று முன் கிடைத்த தகவல்:

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் வருகையை எதிர்த்து சிலர் வீதிகளில் டயர்களை போட்டும் கருப்பு கொடிகளை கட்டியும் வீதிகளில் எதிர்ப்பு செய்தனர் எனிலும் தாம் திட்ட மிட்டவாறு நிகழ்ச்சிகளை நடத்துவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
முஸ்லிம் அரச ஊழியர்க்கு நாளை சம்பளம்

அரசாங்க முஸ்லிம் ஊழியர்களின் இம்மாதத்துக்கான சம்பளத்தை புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாளை 17 ஆம் திகதி வழங்குமாறு திறைசேரி அறிவித்துள்ளது.
திறைசேரியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாயகம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் பிரதம செயலாளர்களுக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி குற்றச்சாட்டு

நம் நாட்டுத் தலைவர்கள் சிலர் சர்வதேச நாடுகளுக்குச் சென்று நாட்டை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவர் எதிர்க்கட்சிகளுக்கு தலைமைத்துவம் வழங்குவதில்லை. மாறாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார்.
நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை எதிர்ப்பதற்கே எதிர்க்கட்சி தலைவர் இருக்க வேண்டும். நாட்டுக்கு எதிராகச் செயற்படக்கூடாது.
இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்கிழமை அம்பாந்தேரட்டை மாவட்டத்தின்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த நிகழ்விலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டுக்கு உதவிகள் கிடைப்பதற்கு இடமளிப்பதில்லை. உதவிகளை வழங்கவேண்டாம் என்று கூறப்படுகின்றது. நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை வீதியில் இழுத்துப் போடுவதற்கும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்படுகின்றது இவ்வாறான எதிர்க்கட்சித் தலைவர் நாட்டுக்குத் தேவையில்லை. வேறு நாடுகளில் என்றால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசியலை மறந்துவிடுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.
அரசின் ஜனநாயக அடக்குமுறைக்கு எதிராக ஜேவிபி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் ஜனநாயக அடக்கு முறைக்கு எதிராக இன்று ஜேவிபி, லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் ஜேவிபியின் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் சுயாதீன ஆணைகுழு ஒன்று நியமிக்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்காவிட்டால் தமது போராட்டம் மேலும் தொடரும் எனவும் ஜேவிபி தெரிவித்துள்ளது.
இழந்த பிரஜாவுரிமையை மீளப் பெறலாம்
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் தகவல்:
அமெரிக்காவில் குடியேறிய பின் இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்த இலங்கையர்கள் தற்போது இலங்கையில் நிரந்தர சேமிப்புக் கணக்குகளிலும் திறைசேரி முறிகளிலும் உண்டியல்களிலும் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் தங்களுக்கு இருக்கும் அமெரிக்க பிரஜாவுரிமையுடன் இலங்கைப் பிரஜாவுரிமையையும் பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜாலியா விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இலங்கையில் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 25,000 அமெரிக்க டொலரை வைப்பிலிடுவதன் மூலம் கட்டணம் செலுத்தாமலே இரட்டை பிரஜாவுரிமையை பெற்றுக் கொள்ளலாம் என்று விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை அமெரிக்காவிலிருந்து புதிய வர்த்தகத்தையும் முதலீட்டையும் கவருவதற்கு இலங்கைக்கு உதவுமாறும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.
எனது கட்சி ஆட்சியிலிருந்தும் என் உயிருக்கு உத்தரவாதமில்லை : கேரளாவில் சந்திரிக்கா

“எனது கட்சியே இலங்கையில் அரசாட்சி புரிகிறது. ஆனால் அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கேரளாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர், அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தனைச் சந்தித்த பின் ஊடகவியலாளரிடம் கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் அச்சமும் சுதந்திரமற்ற சூழலும் கலந்து காணப்படுகின்றன. புலிகளுடனான மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னரும் கூட இதே நிலைமைதான் இன்றும் காணப்படுகின்றது ” என்றார்.
இலங்கையின் ஜனநாயகம் பற்றிக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்த சந்திரிக்கா, அங்கு பெருந்தொகையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரனதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன், நடேசன், தர்மரட்ணம் சிவராம் ஆகியோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
virakesari







