9 வயது சிறுவன் 6 வயது சிறுமியை கற்பழிப்பு ?

ஊடகங்களும், சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் இடம்பெறும் ஆபாச நிகழ்ச்சிகளும் காட்சிகளும் சிறுவர்களையும் குற்றம் செய்யத் தூண்டுகின்றன என்பதற்கு உதாரணமாக கீழ்க்கண்ட இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கற்பழிப்பு வழக்கில் கைதான சிறுவன் என்ற நிலையை இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் இன்டோரா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பெற்றுள்ளான்.
ஒன்பதே வயதான அந்த சிறுவன், தன்னுடன் விளையாடிய 6 வயது சிறுமியை, வீட்டில் அவர்களின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மைனரான சிறுவனைக் கைது செய்த காவல்துறையினர், சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிணையில் விடுவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில் 10 வயதான மாணவர்கள் 3 பேர் சேர்ந்து, அவர்கள் படித்த பள்ளியைச் சேர்ந்த 4 வயதான மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஓரிரு தினங்களில், ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 9 வயதான சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவலாக அமைந்துள்ளது.
இண்டோரா அருகே ஜலோரா மொஹல்லா என்ற இடத்தைச் சேர்ந்த அந்த குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளிக்கு ஒன்றாக வருபவர்கள். பல ஆண்டுகளாக ஒன்றாக விளையாடுபவர்கள்.
கடந்த ஞாயிறன்று இதேபோல சிறுமியின் வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று விட்டனர்.
அப்போது திடீரென்று அந்த சிறுவன் குளியலறைக்குள் சிறுமியை இழுத்து, அந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான். சிறுமி மறுத்த போதிலும் அடித்து பணிய வைத்துள்ளான்.
சிறுமியின் பெற்றோர் மாலையில் வீடு திரும்பியதும், சிறுமி அழுது கொண்டிருப்பதை அறிந்து விசாரித்துள்ளனர். சிறுமிக்கு இரத்தப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிறுவனையும், சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அதில் சிறுமியை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
பொதுவாக 5ஆம் வகுப்பு படிக்கக்கூடிய குழந்தைப் பருவம் மாறாத ஒரு சிறுவன், தன்னுடன் விளையாடும் சிறுமியை பாலியல்ரீதியில் துன்புறுத்தத் தூண்டியது எது?
வெப்துனியா







